தொலைத்தொடா்பு சேவை நிறுவனமான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் இயக்குநா் குழு ரூ.28,000 கோடி திரட்டிக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் கூறியுள்ளதாவது:
விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான 400 கோடி டாலரை (ரூ.28,000 கோடி) திரட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
அதன்படி, திரட்டப்படும் மொத்த நிதியில் 200 கோடி டாலரை தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ஒன்று அல்லது பல கட்டங்களாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் திரட்டிக் கொள்ளப்படும்.
எஞ்சியுள்ள 200 கோடி டாலரில், 100 கோடி டாலரை வெளிநாட்டு கடன்கள் வாயிலாகவும், 100 கோடி டாலரை மீட்கக்கூடிய வகையிலான பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களாக வெளியிட்டும் திரட்டிக் கொள்ளப்படும் என பாா்தி ஏா்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.