/

கணவரைக் கொன்ற மனைவிக்கு ஆயுள்

குடித்துவிட்டு துன்புறுத்திய கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

Updated On :1 மார்ச் 2013, 11:59 pm

குடித்துவிட்டு துன்புறுத்திய கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை சௌகார்பேட்டை பெருமாள் முதலி தெருவைச் சேர்ந்தவர் மாணிக்சந்த். இவரது மனைவி பிரமிளாகுமாரி. இந்தத் தம்பதியினருக்கு 12 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர்.

மாணிக்சந்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் உள்ள பரத்பூருக்கு  பிரமிளாகுமாரி சென்றுள்ளார். அங்கு கைத்துப்பாக்கி ஒன்றை ரகசியமாக அவர் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் 22.10.06-ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது வீட்டு பீரோவிலிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து  கணவன் மாணிக்சந்தை மூன்று முறை சுட்டார். இதில்  மாணிக்சந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யவும் அவர் முயன்றார்.

ஆனால், அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. இது தொடர்பாக  போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு 6-வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கலியமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை வெள்ளிக்கிழமை அவர் வழங்கினார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரமிளாகுமாரிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.