/

"வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்வு வழங்க வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 11:05 pm

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்வு வழங்க வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் இந்த அட்டைகளை அனுப்பினர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி- வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சென்னை தியாகராய நகரில் உள்ள நவபாரத் மெட்ரிக் பள்ளியில் மார்ச் 16 முதல் நடைபெற்று வந்த இந்தப் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன.

இந்த மையத்தில் மட்டும் 823 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பயிற்சி பெற்றனர். இதில் 25 சதவீதம் பிற சமூகத்தினரும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 22 மையங்களில் 10 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

பயிற்சி நிறைவு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் பங்கேற்று ஆசிரியர் பட்டதாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த விழாவில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கும் வகையில் அரசாணை எண். 181 திருத்தப்பட வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண். 252) இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு தபால் அட்டைகளை ஆசிரியர் பட்டதாரிகள் அனுப்பினர்.

அதேபோல், அரசியலமைப்புச் சட்ட முகப்பில் கூறியுள்ளவாறு, சமத்துவ இந்தியாவை உருவாக்கவும், சாதியை மறுக்கவும், தீண்டாமையை ஒழிக்கவும், அனைவரும் சமம் என வாழும் சமத்துவமிக்க சமுதாயம் படைக்கவும் வருங்கால ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் அ. பன்னீர்செல்வம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் ஐ.பி. கனகசுந்தரம், பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மைய ஒருங்கிணைப்பாளர்கள் பி.கிருஷ்ணா, இனியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.