

விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள 'வாலு' படம் வெளியாவதில் பல பிரச்னைகளைச் சந்தித்துள்ளது. நீதிமன்றம் வரை சென்று ஒருவழியாக பிரச்னைகள் எல்லாம் ஓய்ந்தபிறகு, இப்போது ஆகஸ்ட் 14-ம் தேதி படம் வெளியாகத் தயாராக உள்ளது.
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படமும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இப்படத்துக்கான திரையரங்குகள் ஒப்பந்தம் மட்டும் உதயநிதி ஸ்டாலின் செய்து தருகிறார்.
இந்நிலையில், சிலர் இன்னமும் படத்தை வெளிவராமல் தடுக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் என் மீது வைக்கும் அன்பை யாராலும் தடுக்கமுடியாது. கடவுள் அவர்களுக்குப் பதில் அளிப்பார் என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் சிம்பு ட்வீட் செய்தது சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை உண்டுபண்ணியது.
உதயநிதி ஸ்டாலினால் தான் வாலு படத்துக்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று கருதிய சிலர், ட்விட்டரில், சில ஹாஷ்டேக் மூலமாக உதயநிதி ஸ்டாலினை விமரிசித்து ட்வீட் செய்தார்கள்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தன் தரப்புப் பதிலை அளித்தார். மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. என்னால் எப்படி வாலு படத்தை வெளிவராமல் தடுக்கமுடியும்? நான் ஏன் செய்யப்போகிறேன்? இதில் ஏதாவது லாஜிக் உள்ளதா? நண்பர்களே, இதுபோன்ற ஒரு முடிவுக்கு வரும்முன்பு கொஞ்சம் யோசியுங்கள் என்றார். மேலும் இதுதொடர்பாக இரு ட்வீட்களை வெளியிட்டார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸும் இந்தப் பிரச்னை தொடர்பாக ட்வீட் வெளியிட்டுள்ளது.
இந்தப் பிரச்னை தொடர்பாக மேலும் ட்வீட் செய்த சிம்பு: வாழு, வாழ விடு. என் ரசிகர்கள் அமைதி காக்கவேண்டும். கடவுளின் கருணையால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். அப்படி ஏதாவது என்றால் வெளிப்படையாகத் தெரிவிப்பேன். எனவே அமைதியாக இருங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.