மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகை ஒருவருக்கு விரைவில் திருமணமாகப் போகிறது என்ற ரகசியத்தை பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகை தீபிகா படுகோன் எதேச்சையாகத் தெரிவித்தார்.
பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், அலியா பட், நடிகர் ஆயுஷ்மான் குரானா மற்றும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட சில நடிகர்கள் சினிமா பத்திரிகை ஒன்று சமீபத்தில் நடத்திய திரைப்படங்கள் தொடர்பான கலந்துரையாடலில் பங்கு பெற்றனர்.
அப்போது தொகுப்பாளர், நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் இந்திய சினிமா தொடர்பாக இங்குள்ள நடிகர்களில் நீங்கள் யாரிடம் இருந்து அறிவுரைகளை பெற விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்துப் பேசிய தேவரகொண்டா, 'வெட்கத்தை விட்டுச் சொல்வதானால், இங்குஅமர்ந்திருக்கும் கலைஞர்கள் மீது எத்தனையோ பேருக்கு காதல் இருக்கும், நானும் இங்கிருக்கும் தீபிகா மற்றும் அலியா ஆகியோரைக் காதலிக்கிறேன். ஆனால் தீபிகாவுக்கு திருமணம் ஆகி விட்டது என்று கூறினார்.
உடனே இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய தீபிகா படுகோன், 'அலியாவிற்கும் விரைவில் திருமணமாகப் போகிறது' என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியான அலியா, தீபிகாவிடம், 'அதை ஏன் இப்போது இங்கே சொல்கிறீர்கள்?' என்று தெரிவித்தார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட தீபிகா தான் சாதாரணமாக சொன்னதாகக் கூறி, சிரித்துச் சமாளித்து விட்டார்.
இருந்த போதிலும் அலியா பட்டிற்கும் அவரது காதலரும் பாலிவுட் நடிகருமான ரண்பிர் கபூருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக இந்த ஆண்டு துவக்கத்தில் தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.