

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’மழை பிடிக்காத மனிதன்’. எந்தவித பரபரப்பான விளம்பரமும் இன்றி திரையைத் தொட்ட படம், கவரும் வகையில் உள்ளதா?
ஜீவா ஷங்கர் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2012 ஆம் வெளியான திரைப்படம் ’நான்’. அந்த திரைப்படத்தின் பார்ட் - 2 வாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம். ஆனால் அதை இயக்குநர் மறுக்கிறார். இந்த படத்திற்கும் நான் (2012)க்கும் சம்பந்தமில்லை, அந்த விஷயங்கள் தனக்குத் தெரியாமல் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என அவர் குற்றம் சாட்டியுள்ளார். சலிம் எனும் கதாப்பாத்திரத்தின் கதையாக படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இது சலிம் இல்லை என இயக்குநர் கூறுகிறார்.
அதைப் பற்றிய விடைகள் பின்னாளில் தெரியவரும். இப்போது ”மழை பிடிக்காத மனிதன்”ஆக வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனமாக இதைப் பார்க்கலாம்.
நான் பட கிளைமேக்ஸ்க்குப் பின், ரகசிய பாதுகாப்புப் படையில் சலிம் வேலை செய்து, அங்கு தன்னுடைய கமேண்டரின் தங்கையை திருமணம் செய்துகொள்கிறார். நான் திரைப்படத்தில் கிளைமேக்ஸில் கொல்லப்பட்ட இளைஞரின் அப்பாவான அமைச்சர், சலிமை தேடி கொலை செய்ய வருகிறார். அந்தத் தாக்குதலில் சலிமின் மனைவி கொல்லப்படுகிறார். இந்த ஆபத்துகளிலிருந்து சலிமைக் காப்பாற்ற அவர் இறந்துவிட்டதாக நாடகமாடி, கமேண்டர் சரத்குமார் அவரை புதிதாக ஒரு ஊரில் மறைந்து தங்க வைக்கிறார்.
அந்த ஊரில் எந்த பிரச்னையும் செய்யாமல் அமைதியாக வாழச் சொல்கிறார். அங்கு சலிமிற்கு புதிய உறவுகள் கிடைக்கின்றன. அவர்களுக்கு அங்குள்ள பெரிய ரவுடிகளால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து சலிம் எப்படி அவர்களைக் காப்பாற்றுகிறார், அதனால் அவருக்கு என்ன பிரச்னைகள் வருகின்றன என்பதே இந்த மழை பிடிக்காத மனிதன்.
ஓக்கேவான கதை, ஆனால் அதற்கு தேவையான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. அதைப் படமாக்க தேவையான வேலைகளை சரியாக செய்து கொடுத்திருக்கிறது படக்குழு. எந்த புதுமையும் இல்லாமல் சராசரி ஹீரோயிக் படமாக உருவாகியிருப்பதுதான் படத்தின் மைனஸ்.
போர் அடிக்கும்போது சர்வதேச திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த கால பார்வையாளர்களுக்கு இந்த படம் சலிப்பையும், ஏமாற்றத்தையும்தான் அளிக்கும். படத்தின் கதாநாயகனுக்கு ஏற்ற நடிகராக விஜய் ஆண்டனி காட்டப்படவில்லை. சண்டைக் காட்சிகளும், மாஸ் சீன்களிலும் அவர் ஒட்டாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. அவரை கதாப்பாத்திரத்தோடு பொருத்த மேலும் முயற்சி எடுத்திருக்கலாம். வில்லன்களாக வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் நன்றாக பொருந்தியுள்ளது சிறப்பு. போலீசாக வரும் முரளி ஷர்மா, வில்லனாக நடித்திருக்கும் தனஜெய் ரசிக்க வைக்கிறார். சரண்யாவின் மகனாக வரும் கதாப்பாத்திரம் ஓவர் நடிப்பால் சற்று சோதிக்கிறார்.
படத்தில் ஆறுதல் அளிக்கும் விஷயங்களாக இருப்பவை, இசை, நடிப்பு, எடிட்டிங் எனலாம். அவற்றோடு சேர்த்து படத்தின் கிளைமாக்ஸ்-க்கு கண்டிப்பாக பாராட்டுகள் அவசியம். வழக்கமான பலிவாங்கல் கதைகளுக்கான கிளைமாக்ஸ் ஆக இல்லாமல் புதிய முயற்சி எடுத்திருப்பது கட்டாயம் பாராட்டப்பட வேண்டியது.
உண்மையில் படத்தின் பெயருக்கான காரணம் அவ்வளவு வலுவாகவும் இல்லை. அழுத்தமாக காட்சியாக்கப்படவும் இல்லை. அவ்வப்போது வரும் நாய்குட்டி காட்சிகள் கண்டிப்பாக இப்போதைய ஆடியன்ஸ்-ஐ உருக வைத்திடாத வகையில்தான் உள்ளது. எடிட்டிங்கில் சில புதுமைகள் ரசிக்கும்படியாக உள்ளன.
மேகா ஆகாஷ் வழக்கமான நடிகை கதாப்பாத்திரம் இல்லை எனச் சொல்வதற்காக அவருக்கும் ஒரு கதை எழுதப்பட்டுள்ளது. அவையும் ரசிக்கும்படி இல்லை. அவருடனாக காதல் காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளன. சில உரையாடல்கள் செயற்கையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது காதலைக் கடத்துவதில் எழுத்தாளருக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் வந்துபோகும் 100 ஆக்சன், பலிவாங்கல் படமாகவே முக்கால்வாசி நகர்த்தி, கிளைமேக்ஸில் நல்ல பெயர் வாங்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.