பிரபல ஹிந்தி நடிகரும், மக்களவை உறுப்பினருமான வினோத் கன்னா (70) உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் வியாழக்கிழமை காலமானார். திரைத் துறையில் மட்டுமன்றி பொது வாழ்க்கையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய வினோத் கன்னாவின் மறைவு, அவரது ரசிகர்களையும், தொகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைத் துறையினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வயோதிகம் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவனையொன்றில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வினோத் கன்னா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை காலை வினோத் கன்னாவின் உயிர் பிரிந்தது. மறைந்த வினோத் கன்னாவுக்கு கவிதா கன்னா என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று மாலை வினோத் கன்னாவுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அதில் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் உள்ளிட்ட மூத்த நடிர்கள் கலந்துகொண்டார்கள்.
இதுகுறித்து ரிஷி கபூர் ட்விட்டரில் கூறியதாவது:
அவமானகரமானது. இந்தத் தலைமுறையின் எந்தவொரு நடிகரும் வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் அவர்களுடன் அவர் பணிபுரிந்துள்ளார். மரியாதை செலுத்த இந்தத் தலைமுறை நடிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். நான் இறந்தபிறகும் இதுபோன்ற சூழலுக்குப் பழகவேண்டும். இன்றைய நட்சத்திரங்கள் மீது கோபமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.