சமீபத்தில் வெளியான அருவி படத்தை ரஜினி பாராட்டியுள்ளார்.
'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் அருவி படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். பிரபல இயக்குநர் ஷங்கர், அருவி படத்தைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டார். இந்நிலையில் அருவி படத்தைப் பார்த்த ரஜினி, இயக்குநர் அருண் பிரபுவை அழைத்துப் பாராட்டியுள்ளார். இத்தகவலை அருண் பிரபு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைப்பேசி அழைப்பு. ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி என்று ட்வீட் வெளியிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் அருண் பிரபு. இந்தப் படத்தைப் பார்த்து அழுதேன், சிரித்தேன், பல விஷயங்களையும் யோசிக்கவைத்துவிட்டது. அருவி படம் பற்றி இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் பேசுவார்கள் என்று ரஜினி கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து ட்வீட் செய்த படநாயகி அதிதி பாலன், அருவி படக்குழுவினரை ரஜினி அழைத்துப் பாராட்டும்போது என்னால் மகிழ்ச்சியை அடக்கமுடியவில்லை. மகிழ்ச்சி என்று ட்வீட் செய்துள்ளார்.