ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா நடித்துள்ள படம் சி 3 (சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம்). இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சி 3 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படம், பிப்ரவரி 9 அன்று வெளிவரும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படக்குழு செய்தியாளர்களை நேற்று சந்தித்தது. அப்போது நடிகர் சூர்யா கூறியதாவது:
நேற்றிரவு சி3 படத்தை என் அம்மா பார்த்தார்கள். அப்போது அவர் என்னிடம் சொன்னார் - முதலிரண்டு பாகங்களை விடவும் எனக்கு இதுதான் மிகவும் பிடித்த படம் என்றார். நான் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். கனல் கண்ணனின் ஒத்துழைப்பால் படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் அபாரமாக வந்துள்ளன. ஹரி மிகவும் வேகமாகப் பணிபுரியக்கூடியவர். 120 நாள்களில் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தரத்தில் குறை வைக்காமல் ஒரே நாளில் 80 ஷாட்களை எடுப்பார். சிங்கம் பிராண்டு என்பது என் வாழ்வின் மைல்கல்களில் ஒன்று. எனக்கு இது புதிய உயரத்தை அளித்துள்ளது என்றார்.