சென்னை: தமிழ்த் திரையுலகில் தற்பொழுது நிலவும் இரட்டை வரி தொடர்பான நிலைமை சீராகும் வரை, எனது சம்பளத்தை 15% குறைத்துக் கொள்கிறேன் என்று பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி அறிவித்துள்ளார்.
மத்திய அரசு விதித்துள்ள 28% ஜி.எஸ்.டி வரியுடன், தமிழக அரசின் 30% கேளிக்கை வரியும் இணைவதால், திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை நீக்க வலியுறுத்தி தென் இந்திய திரைப்பட வர்த்தக சபையின் சார்பாக இன்று முதல் தமிழகம் முழுவதும் 1000 திரை அரங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவுமான மதன் கார்க்கி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து பின்வறுமாறு:
திரை அரங்கங்கள் மூடப்பட்டு இருப்பதைப் பார்க்கும் பொழுது மனம் வருத்தமடைகிறது. வரி தொடர்பான சிக்கல் தீர்க்கப்பட்டு, திரையுலகம் விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என்று நம்புகிறேன். அதுவரை பாடல்கள் மற்றும் வசங்கள் எழுதும் பணிகளுக்கு, என்னுடைய சம்பளத்தில் 15 சதவீதத்தினை குறைத்துக் கொள்கிறேன். இது திரையுலகுக்கு உதவும்'
இவ்வாறு மதன் கார்க்கி தன் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.