நடிகை கஜோல் கலந்துகொண்ட விருந்தில் மாட்டுக்கறி பரிமாறப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று, ஃபேஸ்புக் லைவ் வீடியோ நிகழ்வில் கலந்துகொண்டார் நடிகை கஜோல். தனது நண்பர் ரயான் ஸ்டீபன்ஸ் தயார் செய்த உணவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த உணவு பற்றி ரயான் விளக்கும்போது, அது மாட்டுக்கறியால் தயார் செய்யப்பட்ட உணவு என்று கூறினார். இதனால் சர்ச்சை உண்டானது.
இந்நிலையில் நடிகை கஜோல் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் நண்பரின் மதிய உணவு விருந்தில் நான் கலந்துகொண்ட வீடியோ ஒன்று வெளியானது. அந்த விருந்தில் மாட்டுக்கறி பறிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இல்லை, அது தவறான தகவல். அதில் உள்ளது, எருமை மாட்டுக் கறி. அது சட்டபூர்வமாக விற்கப்படுகிறது. நான் இதைக் கூறக்காரணம், இந்த உணர்வுபூர்வமான விஷயம். மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும் என்பதால். அது என் நோக்கம் அல்ல என்று கூறியுள்ளார்.