எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு ஜாமீன்!

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...

News image
Updated On :3 அக்டோபர் 2017, 8:52 am

எழில்

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மலையாள நடிகர் திலீப்புக்குக் கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

கொச்சி அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பிய கேரள நடிகை, ஒரு கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகர் திலீப்பை போலீஸார் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கைது செய்தனர்.

 இந்த வழக்கில், முதலாவதாக திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிறகு, மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் சார்பில் ஜாமீன் கோரி 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நிலவரம் தற்போது முழுவதும் மாறி விட்டதாகவும், பாலியல் கொடுமைச் சம்பவ சதியில் தனக்கு சதியோ அல்லது அதில் தொடர்போ இல்லை என்றும் தீலிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த மனுவையும் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் 3-வது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் திலீப். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. நடிகையைக் கடத்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தால் பல்சர் சுனில் தலைமையிலான கூலிப்படைக்கு ரூ. 1.50 கோடியும் காவல்துறையிடம் சிக்கினால் இது இரண்டு மடங்காகி ரூ. 3 கோடி தருவதாகவும் திலீப் உறுதியளித்துள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்நிலையில் இன்று, கேரள உயர் நீதிமன்றம் திலீப்புக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. திலீப், தன்னுடைய கடவுச்சீட்டை ஒப்படைக்கவேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 85 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்றுள்ளார் திலீப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.