நிர்ணயித்த கட்டணமே திரையரங்குகளில் வசூலிக்கப்படும்: அபிராமி ராமநாதன் உறுதி!
தீபாவளி அன்று வெளிவரும் மெர்சல் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள் கிழமை முதல் தொடங்கும் என்று கூறியுள்ளார்...


தமிழ்த் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 10%-லிருந்து 8% ஆக தமிழக அரசு குறைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அபிராமி ராமநாதன், கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்கமாட்டோம் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
தமிழ் மொழிப் படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது கடந்த செப். 27-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. திரைப்படத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை நீக்குவது தொடர்பாக, விஷால் உள்ளிட்ட திரைப்படத் துறையினரும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் தமிழ்த் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 10%-லிருந்து 8% ஆக தமிழக அரசு குறைத்துள்ளது. இதையடுத்து விஷால் உள்ளிட்ட திரைத்துறையினர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் கூறியதாவது: கேளிக்கை வரியை முழுமையாகக் குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் தமிழக அரசு கேளிக்கை வரியை 10%-லிருந்து 8% ஆகக் குறைத்துள்ளது. மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 40, அதிகபட்சக் கட்டணம் ரூ. 150. திரையரங்குகளில் இதை விடவும் அதிகமாகக் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம். அதிகக் கட்டணத்துக்கு விற்காதீர்கள் என்று தயாரிப்பாளர் சங்கமே கூறுகிறோம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட யாரும் அதிகம் கொடுக்க வேண்டாம். மக்கள், நியாயமான கட்டணத்தில் படம் பார்க்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். திரையரங்க கேண்டீனில் அதிகபட்ச சில்லறை விலைக்கே உணவுப் பொருள்களை விற்கவேண்டும். பொருட்களைப் பல மடங்கு விற்றால் புகார் தரலாம் என்று விஷால் கூறியுள்ளார்.
அரசின் இந்த முடிவு மற்றும் விஷாலின் பேட்டி குறித்து தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறியதாவது:
கேட்டதை அரசு கொடுத்துவிட்டது. எனவே அதிக விலைக்கு டிக்கெட்டை விற்கமாட்டோம். கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய நடிகர்களின் படத்துக்கு அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். சிறிய படமாக இருந்தால் கட்டணத்தைக் குறைத்து வசூலிப்போம். கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வோருக்கு உறுதுணையாக இருக்கமாட்டோம். திரையரங்குகளில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய தயார்.
பார்க்கிங் கட்டணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அது பற்றி பேச முடியாது. அனைத்து உணவுப் பொருள்களையும் சரியான விலைக்கே விற்போம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக டிக்கெட் கட்டணம் விற்றால் புகார் அளிக்கலாம்.
மெர்சல் படம் அறிக்கப்பட்ட தேதியில் திரைக்கு வரும். தீபாவளி அன்று வெளிவரும் அப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள் கிழமை முதல் தொடங்கும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...