கருத்துரிமை அடிப்படையிலேயே "மெர்சல்' படத்தின் வசனங்கள் இருப்பதாக மண்டல தணிக்கைக் குழு அதிகாரி மதியழகன் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகியுள்ள 'மெர்சல்' திரைப்படத்தில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந்தியா திட்டம் மற்றும் மருத்துவ வசதிக் குறைபாடு உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான காட்சியை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கலாமா? என்ற விவாதத்தில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், படத்துக்கு தணிக்கை அளித்த குழு சார்பில் அதன் மண்டல தணிக்கைக் குழு அதிகாரி மதியழகன் கூறியிருப்பதாவது:
"மெர்சல்' படத்தில் தனிப்பட்ட யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை. கருத்துரிமை அடிப்படையிலேயே காட்சிகள் உள்ளன. படத்தின் காட்சிகளை நீக்க வேண்டுமெனில் தணிக்கைக் குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பக்கம் படக்குழுவினர், சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கலாமா? அல்லது சர்ச்சைக்குரிய காட்சியின் ஒலியை மட்டும் (மியூட்) நீக்கம் செய்யலாமா? என்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.