
கோலிவுட்டைப் பொருத்தவரையில் ரீ என்ட்ரியில் ஜெயிப்பது கஷ்டமான விஷயம். அதுவும் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாயகிகள் எல்லாம் தங்களுடன் ஜோடியாக நடித்த அதே நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பது ஒரு முரண் சோகம். ஆனால் இதையெல்லாம் மீறி ஜோதிகாவின் ரீ என்ட்ரி அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
திருமணத்துக்குப் பின் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா சில விளம்பரப் படங்களில் மட்டும் நடித்து வந்தார். ஒரு ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்ற பழமொழிக்கு மாற்றாக ஜோவின் கம் பேக் வெற்றிக்குப் பின்னால் இருப்பது அவரது கணவர் சூர்யா தான். இதை ஜோதிகா பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அனைவரும் ஆச்சரியத்தக்க வகையில் ஜோதிகாவிடம் பெரிய மாற்றங்கள் இல்லை. எப்படி சென்றாரோ மீண்டும் அதே போலவே திரும்பி இருக்கிறார். அதுவும் அவருடைய சிரிப்பும், முகப் பொலிவும் இன்னும் மெருகேறியுள்ளது. '36 வயதினிலே' படம் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். அதில் கன கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் ஜோதிகா. அடுத்து தற்போது வெளிவர இருக்கும் பிரம்மா இயக்கியுள்ள 'மகளிர் மட்டும்' படத்திலும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம். பாலாவின் 'நாச்சியார்' படத்திலும் ஜோதிகாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவரும் என்றனர் படக்குழுவினர்.
முக்கியமான இயக்குனர்களின் படங்களில் நடித்து தனக்கான இடத்தையும் அங்கீகாரத்தையும் அழகாக பெற்றுவரும் ஜோ, இயக்குனர் மணி ரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கு முன் 2006-ல் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் அழகம் பெருமாள் இயக்கிய 'டும் டும் டும்' படத்தில் ஜோதிகா நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், அதுவும் மணி ரத்னம் இயக்கத்திலேயே நடிப்பதால் ஜோதிகா உற்சாகமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பேட்டியில் இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தில் முன்னதாக ராம் சரண் மற்றும் பஹத் பாசில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் நடிக்கிறார்கள் என்கிறார்கள். ஒட்டு மொத்தத்தில் இப்படத்தில் நட்சத்திர கூட்டணி உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.
ஜோதிகா மணி ரத்னம் படத்தில் நடிப்பது அவரது திரை வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றனர் அவரது ரசிகர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.