ராம் கோபால் வர்மாவின் அடுத்த வெடிகுண்டு ‘என்டிஆரின் லக்‌ஷ்மி’ பட அறிவிப்பு!

ராம் கோபால் வர்மாவின் அடுத்த வெடிகுண்டு ‘என்டிஆரின் லக்‌ஷ்மி’ பட அறிவிப்பு!

இந்தத் திரைப்படம் என் டி ஆரின் அரசியல் வாழ்க்கை, அவரது இரண்டாவது மனைவியான லக்‌ஷ்மி பார்வதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசவிருக்கிறதாம்.
Published on

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் எப்படியோ? அப்படித்தான் ஆந்திராவில் என்டிஆர்! அவருக்கான செல்வாக்கின் மதிப்பு அளவிட முடியாதது. அவர் மறைந்து பல வருடங்களான நிலையிலும் இன்றும் ஆந்திராவில் என் டி ஆர் என்றதும் தேவுடு என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளும் அப்பாவி ரசிகர்கள் பலருண்டு. அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை பதிவு செய்யாமல் விட்டால் எப்படி என்ற ஆதங்கம் பிரபல இயக்குனரும், சர்ச்சைகளின் நாயகருமான ராம் கோபால் வர்மாவுக்கு வந்தது. அதன் விளைவாக அவர், என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரத்தைப் படமாக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அறிவித்ததோடு அந்தப் படத்திற்கான ஒரு பாடலையும் ஷூட் செய்து வெளியிட்டார். அதற்கு என் டி ஆர் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவே அப்போதைக்கு அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது.

அப்போதைக்கு அடங்கிய பூதத்தை இப்போது மீண்டும் தட்டி எழுப்பியுள்ளார் ராம் கோபால் வர்மா. ஆமாம்... இப்போது புதிதாக 'என் டி ஆரின் லக்‌ஷ்மி’ என்ற பெயரில் புதிய திரைப்படமொன்றை எடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் என் டி ஆரின் அரசியல் வாழ்க்கை, அவரது இரண்டாவது மனைவியான லக்‌ஷ்மி பார்வதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசவிருக்கிறதாம். முதல் அறிவிப்பு அதிருப்தியைக் கிளப்பிய நிலையில் இந்த இரண்டாவது அறிவிப்பு நந்தமூரி குடும்பத்திலும் சரி, என் டி ஆர் ரசிகர்கள் மத்தியிலும் சரி, என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை?! படம் வெளி வந்தால் தெரியும் என்கிறார்கள் டோலிவுட்டில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com