ஜி.எஸ்.டி.வரி விலக்குக் கோரி சினிமா துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சினிமாவுக்கு விலக்கு தரக்கூடாது என விமரிசகர் ஞாநி தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘தமிழ் சினிமாவின் அசல் பிரச்னை வரியே அல்ல. படத் தயாரிப்பு செலவுதான். எவ்வளவு விலை உயர்த்தினாலும் மக்கள் அரங்குக்கு வருவார்கள் என்ற காலம் போய்விட்டது. படத்தின் தரத்தை உயர்த்தி செலவைக் குறைத்தால் ஒழிய தாக்கு பிடிக்க முடியாது. நாங்கள் அப்படியேதான் இருப்போம் அரசு எங்களை வந்து தாங்கவேண்டும் என்ற பருப்பு இனி வேகாது' என்று ஒரு பதிவிலும், அடுத்த பதிவில், 'சுமார் பதினைந்து வருடங்களாக தமிழில் பெயர் வைக்கிறோம் என்று ஏமாற்றி கேளிக்கை வரி விலக்கு வாங்கி அந்தப் பணத்தை பார்வையாளர்களுக்கு டிக்கட் கட்டணத்தில் குறைக்காமல் தாங்களே விழுங்கி ஏப்பம் விட்டு வந்தவர்கள் இப்போது வரி ரத்து கேட்கிறார்கள். கொடுத்தால் அது மக்களுக்கு செய்யும் அநீதி. தயாரிப்புச் செலவைக் குறைக்க ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாதவர்கள் இவர்கள். இதர தொழில்களில் இருக்கும் நிறுவனங்கள் பேலன்ஸ் ஷீட் வெளியிடுவது போல ஒவ்வொரு சினிமாவுக்கும் இவர்களால் வெளியிடமுடியுமா? வெளியிட்டால் அம்பலமாகிவிடுவார்கள்' என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.