/

நீரவ் மோடியுடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பிரியங்கா சோப்ரா!

கடந்த வருட ஜனவரி மாதத்தில் நீரவ் மோடியின் வைர வியாபாரத்தின் விளம்பரத் தூதராக பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டார்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:16 pm

எழில்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, சட்ட விரோத பரிவர்த்தனைகள் மூலம் ரூ.11,400 கோடி மோசடி செய்துள்ளதாக மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) புகார் அளித்துள்ளது. இதில் 280 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொகையாகும்.

ரூ.11,400 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்தனர். ஏற்கெனவே வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தற்போது நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருட ஜனவரி மாதத்தில் நீரவ் மோடியின் வைர வியாபாரத்தின் விளம்பரத் தூதராக பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டார். அப்போது பிரியங்கா கூறியதாவது: நமது பாரம்பரியம் மீது இருவரும் பெருமை கொண்டவர்கள். உலக அரங்கின் முன்பு நவீன இந்தியாவை முன்னிறுத்தும் யோசனையில் இருவரும் இணைந்தோம். அவருடைய நகைகள் செம்மையாக உள்ளன. அதன் அழகான வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தவை என்று கூறினார்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, நீரவ் மோடி மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நீரவ் மோடியின் நகைகளுக்கான விளம்பரத்தில் நடித்ததற்காக பிரியங்கா சோப்ராவுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நீரவ் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

Story image

இதுகுறித்து பிரியங்கா சோப்ராவின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: பிரியங்கா சோப்ரா, நீரவ் மோடி மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அவை தவறானவை. நீரவ் மோடி மீது மோசடிப் புகார் எழுந்துள்ளதால் அவர் நிறுவனத்துடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார் என்று கூறியுள்ளார். இதையடுத்து நீரவ் மோடியுடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரியங்கா சோப்ரா முடிவெடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.