விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் உள்ளிட்ட 3 படங்களின் படப்பிடிப்புகளுக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தின்படி, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்துள்ளது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதேபோல தமிழ்நாட்டில் திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை. தமிழகத்துக்கு வெளியே மார்ச் 23 வரை படப்பிடிப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே படப்பிடிப்பு நடக்கிறது.
இந்தப் படப்பிடிப்புக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் ஹைதராபாத் ஸ்டண்ட் கலைஞர்கள் ராம் - லஷ்மண் இடம்பெற்றுள்ளதால் அவர்களுடைய கால்ஷீட்டின் முக்கியத்துவத்தை மதித்து படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல சசிகுமார் நடித்துவரும் நாடோடிகள் படத்தின் மதுரைப் பகுதி படப்பிடிப்புகள் மார்ச் 24 அன்று முடியவடையவுள்ளது. எனவே இப்படத்துக்கும் தில்லியில் நடைபெற்று வரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்பிடிப்புக்கும் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.