அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பிரபல பாலிவுட் மற்றும் சின்னத்திரை நடிகரான அலோக் நாத் மீது தயாரிப்பாளரும் இயக்குநருமான விண்டா நந்தா மீ டூ புகார் தெரிவித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவொன்றை எழுதியிருந்தார். 19 வருடங்களுக்கு முன்பு அலோக் நாத் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இதையடுத்து மேலும் இரு நடிகைகள் அலோக் நாத் மீ டூ புகார் தெரிவித்தார்கள். இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான குற்றச்சாட்டைக் கூறியதாக விண்டா நந்தா மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் அலோக் நாத்.
இந்நிலையில் சிண்டா (Cine and TV Artistes' Association, CINTAA) என்கிற திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் சங்கத்திலிருந்து அலோக் நாத் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த விண்டா நந்தா மற்றும் அலோக் நந்தா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு வர அலோக் நாத் மறுத்துவிட்டார். இதையடுத்து மீ டூ புகார் காரணமாக சிண்டா சங்கத்திலிருந்து அலோக் நாத் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.