
சென்னை: ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினிக்கு மட்டும் ஏன் இவ்வளவு தயக்கம் என்று ட்விட்டரில் நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தற்போது கட்சி தொடங்குவதற்கான அடிப்படை பணிகளில் இறங்கி உள்ளார். பல்வேறு விஷ்யங்கள் சார்ந்து அவ்வப்போது கருத்து தெரிவித்தும் வருகிறார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டபோது, அங்கு நேரில் சென்ற ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் போராட்டத்துக்கு எதிராகவும் அரசுக்கு சாதகமாகவும் அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்நிலையில் தூத்துக்குடியில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் பயணித்த ஆராய்ச்சி மாணவி சோபியா, பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வியாழன் அன்று படப்பிடிப்புக்காக ரஜினி உத்தர பிரதேசம் புறப்பட்டார். சென்னை விமான நிலையம் வந்தவரிடம் சோபியா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டுச் சென்றார். அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. அரசியலுக்கு வருவதாக அறிவித்தவர் கருத்து சொல்ல மட்டும் தயங்குவது ஏன் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினிக்கு மட்டும் ஏன் இவ்வளவு தயக்கம் என்று ட்விட்டரில் நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்? தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ரஜினிகாந்த் தொடர்பான 'மீம்' எனப்படும் கேலிப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.