சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற இந்தப் படம் உருவாகி வருகிறது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி, போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து அடுத்த நான்கு மாதங்கள் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடைபெறவுள்ளன. நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தயாரிப்பாளர் போனி கபூர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியுள்ளதாவது:
நேர்கொண்ட பார்வை படத்தின் ஆரம்பப் பிரதியைப் பார்த்தேன். மகிழ்ச்சி. என்ன அபாரமாக நடித்துள்ளார் அஜித். ஹிந்திப் படங்களில் நடிக்க விரைவில் ஒப்புக்கொள்வார் என நம்புகிறேன். என்னிடம் 3 ஆக்ஷன் கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் சொல்வார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.