
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது மைதான அரங்கில் ஷாருக் கான் அருகில் அமர்ந்திருந்தார் இயக்குநர் அட்லி. அப்போதே இதுபற்றிய யூகங்கள் உருவாகின. இப்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவலாக உள்ளது.
படத்தின் கடைசி 15 நிமிடத்தில் மட்டும் ஷாருக் கான் வில்லன் வேடத்தில் தோன்றுவார் என்று கூறப்படுகிறது. எனினும் அட்லி மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.