/

வாட்ச்மேன் படத்தில் பணிபுரிந்த அனுபவம்! நடிகை சம்யுக்தா ஹெக்டே பேட்டி!

கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் மிகச் சிறந்த நடிப்பு என்பது அரிதிலும் அரிதான ஒரு கூட்டணி.

News image
Updated On :30 மார்ச் 2019, 10:24 am

DIN

கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் மிகச் சிறந்த நடிப்பு என்பது அரிதிலும் அரிதான ஒரு கூட்டணி. தனது நடிப்பு திறமையை நிரூபித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, இயற்கையாகவே இந்த வரத்தை பெற்றிருக்கிறார். இவர் ஏற்கனவே தென்னிந்திய ரசிகர்களை தனது நடிப்பால் ஈர்த்திருக்கிறார், குறிப்பாக கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரது பப்பி படம் மிக வேகமாக உருவாகி வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வரும் ஏப்ரக் 12-ஆம் தேதி வெளியாகும் வாட்ச்மேன் படம் தமிழில் அவரின் முதல் படமாகியிருக்கிறது.

Story image

இது குறித்து நடிகை சம்யுக்தா கூறும் போது, 'நான் இந்தப் படத்தை பற்றி பேசுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். கதை சொல்லல் ஆகட்டும் அல்லது தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகட்டும், தமிழ் சினிமா மிகச் சிறப்பாக இருக்கிறது. நான் தமிழ் சினிமாவில் 2-படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த இரண்டுமே புதுமையான கருத்துக்களை கொண்டு உருவானவைதான். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை. இந்த இரண்டு படங்களுக்கும் இடையிலான ஒரு பொதுவான தன்மை 'நாய்'. ஆம், மிகவும் தற்செயலாக நடந்தாலும், எனக்கு பிடித்த செல்லப் பிராணிகளுடன் திரையில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் இந்த இரு திரைப்படங்களுமே வேறு வேறு வகையை சார்ந்தவை’ என்றார்.

Story image

வாட்ச்மேன் படத்தில் பணிபுரியும் அனுபவத்தை பற்றி அவர் கூறும் போது, 'இது முற்றிலும் எனக்கு ஒரு புதிய அனுபவம். இயக்குநர் விஜய் சார், பெண்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டுபவர். 'வாட்ச்மேன்' படத்துக்காக என்னை அணுகிய போது, அது என்ன வகை படம் என்பதையோ அல்லது கதையை பற்றியோ நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த படம் நிச்சயம் என்னை மேம்படுத்துவதற்கு உதவும் என எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. படத்தின் முடிவில், என் அனுமானங்களும் நம்பிக்கையும் சரிதான் என்பதை படம் நிரூபித்திருக்கிறது. ஏப்ரல் 12, 2019 அன்று படம் வெளியாவதால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மந்திரவாதிகள். அவர்கள் கைவண்னத்தில் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இது என் பார்வையில் இருந்து மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் பார்வையாளர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தை வழங்கும் என நம்புகிறேன்' என்றார்.

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் (இசை), நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி (ஒளிப்பதிவு), ஆண்டனி (படத்தொகுப்பு), ஏ ராஜேஷ் (கலை) மற்றும் மனோகர் வர்மா (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.