

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்கும் தனி அதிகாரியாக மாவட்டப் பதிவாளர் சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் நடிகர் சங்கத்தை நிர்வகிக்கவும் சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது தமிழக அரசு.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ஒத்திவைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ஆம் தேதி நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது.
2015-18 ஆண்டுக்கான நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 அக்டோபரில் நிறைவடைந்தது. எனினும் தற்போதுவரை நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாகப் பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்துள்ளது தமிழக அரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.