விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்ற இயக்குநர் சேரன், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:
தலைவணங்கி நிற்கிறேன்... எனது 91 நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாகப் புரிந்துகொண்டு என்னைத் தாலாட்டித் தட்டிக்கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.