இந்து அமைப்புகள் எதிர்க்கும் கார்த்தி படம்: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்...
இந்து அமைப்புகள் எதிர்க்கும் கார்த்தி படம்: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்தப் படம் - சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில்  கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. சுல்தான் படம், திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எடுக்கப்படுவதால் அதன் படப்பிடிப்பை மலைக்கோட்டையில் நடக்கூடாது என்று இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் படப்பிடிப்புக் குழுவினரில் சிலர் மது அருந்தியபடி உள்ளதாலும் இதனால் மலைக்கோட்டையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து திண்டுக்கல் காவல்துறை தலையிட்டு இந்து அமைப்புகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதன்பிறகு இந்து அமைப்பினர் கலைந்து சென்றார்கள். 

இந்நிலையில் சுல்தான் படத்தைத் தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சுல்தான் படம் திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும் திண்டுக்கல் மலைக்கோட்டையில் படப்பிடிப்பை எடுக்கக்கூடாது என்றும் கூறி ஒரு அமைப்பினர்  படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இரு வேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சமீபகாலமாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களைத் தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதைக் காண்பிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய தணிக்கைக் குழு உள்ளது. இதுதவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்தத் திரைப்படத்தின் படைப்பாளிகளுக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.

ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் வரலாற்றுத் தலைவர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com