சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்த அமலா பால்: ஆடை பட பிரச்னை தீர்ந்தது!

படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் இன்று வெளியாகவேண்டும் என்பதில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார்... 
சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்த அமலா பால்: ஆடை பட பிரச்னை தீர்ந்தது!

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் அடுத்து இயக்கியுள்ள படம் - ஆடை. அமலா பால் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஆடை படத்தின் காலைக் காட்சி மற்றும் பத்திரிகையாளர் காட்சிகள் ரத்தாகின. தயாரிப்பாளருக்குப் பண விவகாரம் தொடர்பான பிரச்னைகள் இருந்ததால் திரையரங்குகளுக்கு கேடிஎம் அனுப்பப்படவில்லை. இதனால் காலைக்காட்சிகளுக்கு முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார்கள்.

தமிழ் சினிமாவில் அடிக்கடி இதுபோன்ற சிக்கல்கள் உருவாவதால் ரசிகர்களுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. ரசிகர்களின் பணம் மட்டுமல்லாமல் நேரமும் வீணாகிறது. ஒரு படத்தின் வெளியீட்டுக்குப் பிரச்னை எதுவும் இல்லை என்கிற நிலை உருவான பிறகே முன்பதிவைத் தொடங்கவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தாலும் இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு எதுவும் இதுவரை காணப்படவில்லை.

இந்நிலையில் ஆடை பட வெளியீடு தொடர்பான பிரச்னையில் தலையிட்டு சுமூகமாக முடித்துள்ளார் அமலா பால். படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் இன்று வெளியாகவேண்டும் என்பதில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். என்ன செய்தால் படம் இன்று வெளியாகும் என்று காலையிலிருந்து தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் தொடர்ந்து விவாதித்து, பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டுள்ளார் அமலா பால். தயாரிப்பாளரின் சிக்கலைத் தீர்க்க தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தார். இதையடுத்து பண விவகாரத்துக்கு ஒரு தீர்வு கிடைத்தது. இதனால் ஆடை படம் தமிழகம் முழுக்க மாலை 6 மணிக்காட்சியுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com