மூத்த நடிகர் ரிஷி கபூரின் மரணத்துக்கு பிரதமர் மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள்.
பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
2018-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிஷி கபூர் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்கு திரும்பினார். ரிஷி கபூருடன் அவரது மனைவியும், நடிகையுமான நீத்து கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் மும்பையில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
ரிஷி கபூரின் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பன்முகத்தன்மை கொண்டவர், அன்புக்குரியவர், உற்சாகமானவர்... அவர் தான் ரிஷி கபூர். அசாத்தியமான திறமைகளைக் கொண்டவர். சமூகவலைத்தளம் உள்பட எங்கள் இருவருக்குமான உரையாடலை எப்போதும் நினைவுகூர்வேன். படங்கள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி குறித்து எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார். அவருடைய மறைவால் வேதனை அடைந்துள்ளேன். அவரின் குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.
ரிஷி கபூரின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ரிஷி கபூரின் மரணச் செய்தி அதிர்ச்சியை வரவழைக்கிறது. எப்போதும் புன்னகையுடன் உள்ள ஆளுமை. உற்சாகமாக இருந்த ரிஷி கபூர் தற்போது உயிருடன் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. திரையுலகுக்கு இது பேரிழப்பு. அவரின் குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.