எங்களுக்குப் பாதுகாப்பு அளியுங்கள்: காவல்துறையிடம் நடிகை ரியா கோரிக்கை

சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல...
எங்களுக்குப் பாதுகாப்பு அளியுங்கள்: காவல்துறையிடம் நடிகை ரியா கோரிக்கை

எனக்கும் என்னுடைய குடும்பத்தினரின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் நிலவுவதால் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நடிகை ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகா் சுசாந்த் சிங், மும்பை பந்த்ரா புகா் பகுதியில் அமைந்துள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தாா். இந்த வழக்கை துணைக் காவல் ஆணையா் தலைமையிலான மும்பை காவல்துறை குழு விசாரணை நடத்தி வந்தது.

சுசாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடை தந்தை சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக அவருடைய காதலியும் நடிகையுமான ரியா மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது புகாா் தெரிவித்த சுசாந்த் சிங்கின் தந்தை இந்திரஜித், சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15 கோடி பணத்தை ரியா குடும்பத்தினா் தவறாக கையாண்டதாகவும் புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

சுசாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ சிறப்புக் குழு, விசாரணையைத் தொடங்கியுள்ளது. மும்பை காவல்துறையிடமிருந்த பெறப்பட்ட அறிக்கை மற்றும் வழக்கு தொடா்பான ஆவணங்களின் அடிப்படையில் அந்தக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நடிகை ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரு விடியோக்களில் கூறியதாவது:

எனக்கும் என்னுடைய குடும்பத்தினரின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து விட்டோம். அங்கும் நாங்கள் சென்றோம். ஆனால் எந்த உதவியும் எங்களுக்குத் தரப்படவில்லை. எங்கள் குடும்பம் இச்சூழலில் எப்படி வாழ முடியும்? சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல முயல்கிறோம். இதனால் மும்பைக் காவல்துறை எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். 

எங்கள் அபார்ட்மெண்டின் பாதுகாவலர், ஊடகர்களால் காயப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இங்கு 10 வருடங்களாகப் பணிபுரிகிறார். பாதுகாவலரையும் என் தந்தையையும் தாக்கியுள்ளார்கள். இது குற்றமில்லையா? இதற்கு யார் பொறுப்பு? சட்டம் என்று ஏதாவது இருக்கிறதா? குழந்தைகளும் வயதானவர்களும் இந்தக் கட்டடத்தில் வசிக்கிறார்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சுசாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகை ரியாவின் வாட்சப் உரையாடல்களில் எம்.டி.எம்.ஏ., மரிஜூவானா போன்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர் போதைப் பொருள்களைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரியாவின் வாட்சப் உரையாடல்கள் குறித்து விசாரணை செய்யும்படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை, நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ரியாவிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் திரையுலகினருக்குத் தொடர்பு உண்டா என விசாரணை நடத்தவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளது.

சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நீண்ட நாள்களாக என் மகனுக்கு விஷம் கொடுத்து வந்துள்ளார் ரியா. அவர் ஒரு கொலைகாரர். ரியாவும் அவருடன் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com