சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ரா, ஸ்டார்ட் மியூசிக் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடைசியாகப் பங்கேற்றார். அந்நிகழ்ச்சி, வரும் 20-ம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது.
நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்திடம் காவல்துறையினா் கடந்த சில நாள்களாக விசாரணை நடத்தி வந்தனா். ஹேம்நாத்தும் சித்ராவும் ஏற்கெனவே பதிவுத் திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் இறப்பு குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திங்கள் இரவு, காவல்துறையினரால் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். பல முக்கியமான ஆதாரங்களின் அடிப்படையில் சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது பொன்னேரி சிறையில் அவரை அடைத்துள்ளார்கள். டிசம்பர் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சித்ரா இறப்பதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு விடுதிக்குத் திரும்பிய சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.
சித்ரா கடைசியாகப் பங்கேற்ற ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி, வரும் 20-ம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது. அதன் விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது.