சாலை விபத்தில் காயமடைந்த நடிகை ஷபனா ஆஸ்மி, சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
கடந்த மாதம், சாலை விபத்தில் காயமடைந்த நடிகை ஷபனா ஆஸ்மி, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மும்பை - புனே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த ஷபனா ஆஸ்மியின் கார், மும்பையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள கலாபூரில் விபத்துக்கு ஆளானது. கார், டிரக்கில் மோதியதால் ஷபனாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மஹாராஷ்டிராவின் ரைகட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்ட ஷபனா ஆஸ்மி, பிறகு அந்தேரியில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் 12 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை எடுத்துக்கொண்ட ஷபனா ஆஸ்மி தற்போது தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
அனைவருடைய வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. நான் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். டினா அம்பானி, கோகிலாபென் அம்பானி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்களின் ஆகியோரின் அக்கறையான கவனிப்புக்கு நன்றி என்று கூறியுள்ளார்.