ஆளில்லா விமானம் திட்டத்தில் மீண்டும் ஈடுபாடு: அஜித்தால் தாமதமாகிறதா வலிமை படப்பிடிப்பு?

வலிமை படத்தின் படப்பிடிப்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள்...
ஆளில்லா விமானம் திட்டத்தில் மீண்டும் ஈடுபாடு: அஜித்தால் தாமதமாகிறதா வலிமை படப்பிடிப்பு?
Updated on
2 min read


கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆளில்லா விமானம் குறித்த ஒரு புதிய திட்டத்தில் அஜித் ஈடுபட்டு வருவதால் ஹெச். வினோத் இயக்கி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திர தினத்தன்று பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு விருதுகளை தமிழக அரசு அளித்து கௌரவிக்கிறது. மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவைப் போற்றும் விதமாக  ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’ என்ற ஒரு விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும். தமிழக அரசின் 2018 அப்துல் கலாம் விருது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவுக்கு வழங்கப்பட்டது. இந்தக் குழு நடிகர் அஜித்தின் ஆலோசனையில்படி செயல்பட்டது. 

சிறுவயதிலிருந்தே ஏரோ மாடலிங்கில் விருப்பம் உள்ளவர் நடிகர் அஜித். கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து, இந்தச் சிறிய ரக விமானங்களை இயக்குவதிலும், சோதனை செய்வதிலும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இவர் தனது பொழுதைக் கழித்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் தொழில் நுட்பக் கல்லூரியான மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி ( எம்.ஐ.டி.) நிர்வாகம் அழைத்தபோது இவர் விருப்பத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற மிகவும் புகழ்பெற்ற "மெடிக்கல் எக்ஸ்பிரஸ் - 2018 யுஏவி சேலஞ்ச்' எனும் போட்டியில் எம்.ஐ.டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் அஜித், டீம் தக்‌ஷா குழுவினரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்தத் துறையில் அஜித்துக்கு உள்ள நிபுணத்துவத்தைக் கணக்கில் கொண்டு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொருமுறையும் இவர் கல்லூரிக்கு வந்தால் இவரது பயணப்படி ரூபாய் 1000 வழங்கப்படும். இதை இவர் அந்தக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கே வழங்கி விட்டார். 

ஒரு மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் தவிக்கும் நோயாளிகள் அல்லது தொலை தூர கிராமங்களில் உள்ள நோயாளிகளின் ரத்த மாதிரியைப் பெற்று வரும் வகையில் ஆளில்லா விமானத்தை உருவாக்குவது தான், இந்த போட்டிக்கான சவால். இதை எப்படி வடிவமைக்கலாம், எப்படி திரும்பவும் வரும் வகையில் செய்யலாம் என்று திட்டமிட்டு அதைச் செய்வதில் தான் மாணவர்களின் திறமையே இருக்கிறது. இறுதிச் சுற்றில் தக்‌ஷா குழுவினர் 2-ம் இடம் பிடித்தார்கள். இந்தப் போட்டியில் 100 நாடுகள் பங்கு கொண்டன. 

இந்நிலையில் இதுபோன்ற ஒரு குழுவினருடன் அஜித் மீண்டும் இணைந்திருப்பது தான் வலிமை படப்பிடிப்புக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆனால், தக்‌ஷா போன்று மற்றொரு கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆளில்லா விமானம் குறித்த ஒரு திட்டத்தில் அஜித் ஈடுபட்டு வருவதால் வலிமை படப்பிடிப்பில் அவரால் தொடர்ந்து கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. யுஏவி தொடர்பான திட்டத்தில் அஜித்தின் பங்களிப்பு மார்ச் மாதம் முடிவடைகிறது. எனவே அதன்பிறகு தான் அஜித்தால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும் எனத் தெரிகிறது. 

இதனால், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர இதர காட்சிகளை இந்தக் காலக்கட்டத்தில் எடுத்துவிடுமாறு வினோத்திடம் கூறியுள்ளார் அஜித். இதனால் கதாநாயகன் இல்லாமல் வலிமை படப்பிடிப்பைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காரணங்களால் வலிமை படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து இயக்குநரோ பட நிறுவனமோ இதுவரை எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com