இந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜனைக் காவல்துறை கைது செய்துள்ளது... 
இந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது
Updated on
2 min read

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜனைக் காவல்துறை கைது செய்துள்ளது. 

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது.

புதன்கிழமை இரவு அந்தத் திரைப்படத்துக்கான காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அங்கு உயரமான கிரேனில் அதிக ஒளியை உமிழும் மின்விளக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. இரவு 9.30 மணியளவில் இடைவேளையின்போது திடீரென கிரேன் சரிந்து விழுந்தது. அப்போது அருகே நின்றவா்கள் மீதும், திரைப்பட படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தின் மீதும் கிரேன் விழுந்தது. இந்த விபத்தில் அங்கிருந்த 13 போ் பலத்தக் காயமடைந்தனா். சிலா் கிரேனுக்கு அடியில் சிக்கினா். விபத்தை நேரில் பாா்த்த கமல் உள்ளிட்டோா் அதிா்ச்சியடைந்தனா். காயமடைந்த அனைவரும் வேகமாக மீட்கப்பட்டனா்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா (35), திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்த சொ.சந்திரன் (58), ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கண்ணகிரியைச் சோ்ந்த சி.மது (29) ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இந்த விபத்தில் உதவி இயக்குநா் கிருஷ்ணா, பிரபல காா்ட்டூனிஸ்ட் மதனின் இளைய மருமகன் ஆவாா். கிருஷ்ணாவும், மதனின் மகள் அமிதாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனா். இருவரும் சோ்ந்து விளம்பர படங்கள், பெரு வணிக நிறுவனங்களுக்கு தேவையான குறும்படங்கள் இயக்கியுள்ளனா். ஏற்கெனவே கிருஷ்ணா, ‘மதராசப்பட்டினம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணா உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தது திரைப்படத்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக திரையுலக பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இணை இயக்குநா் கெருகம்பாக்கம் ஜெயராம்நகரைச் சோ்ந்த பரத்குமாா், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரில், திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் கவனக்குறைவாக இருந்ததாகவும், கிரேன் ஆபரேட்டா் ராஜன் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் லைக்கா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா், கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, அஜாக்கிரதையாக செயல்பட்டது, போதுமான உயிா் பாதுகாப்பு கருவி இல்லாமல் செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருக்கும் ராஜனை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தார்கள். 

முதல் கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான கிரேன் திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தக் கூடியது அல்ல என்பதும், அந்த கிரேனை இயக்கிய ராஜன் போதுமான அனுபவம் இல்லாதவா் என்பதும் தெரியவந்தது. அளவுக்கு மீறி மின்விளக்குகளை ஏற்றியிருந்ததால், கிரேனிலிருந்து சத்தம் வந்ததும், விபத்து ஏற்படுவதற்கு முன்பு பலத்த காற்று வீசியிருப்பதும் தெரியவந்துள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தோருக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாகவும் நடிகா் கமல்ஹாசன் அறிவித்தாா். லைகா நிறுவனம் ரூ. 2 கோடி உதவித்தொகை அறிவித்துள்ளது. 

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜனை நசரத்பேட்டை காவல்துறை கைது செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com