பிரபல நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி கெளசல்யா ரூ. 1 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
கோடீஸ்வரி நிகழ்ச்சி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் 13 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பெண்கள் மட்டுமே போட்டியாளர்களாகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிப் பெண் ரூ. 1 கோடி பரிசை வென்று சாதனை படைத்துள்ளார். மதுரை நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் கெளசல்யா, காது கேளாத, வாய் பேச முடியாதவர். கோடீஸ்வரி போன்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி ஒருவர் பங்கேற்று ரூ. 1 கோடி பரிசு வென்றதும் இதுவே முதல்முறை.
இந்நிலையில், கெளசல்யா எந்தக் கேள்விக்கு விடையளித்து ரூ. 1 கோடியைத் தட்டிச் சென்றார் என்கிற ஆவல் பலரிடமும் உள்ளது. கெளசல்யா விடையளித்த கேள்வி இதுதான்.
மன்னர் இரண்டாம் புலிகேசியின் கற்பனை இரட்டைச் சகோதரரான நாகநந்தி என்னும் கதாபாத்திரம், 1948-ன் எந்த வரலாற்று நாவலில் தோன்றுகிறது?
அ) பார்த்திபன் கனவு
ஆ) வேங்கையின் மைந்தன்
இ) சிவகாமியின் சபதம்
ஈ) யவன ராணி
இந்தக் கேள்விக்கு, சிவகாமியின் சபதம் என்று சரியாகப் பதில் அளித்தார் கெளசல்யா. 15 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்ததால் ரூ. 1 கோடி பரிசுத்தொகையை அவர் தட்டிச் சென்றுள்ளார்.
ஒருவேளை, இந்தக் கேள்விக்குத் தவறாக விடை சொல்லியிருந்தால் கெளசல்யாவுக்கு ரூ. 3 லட்சத்துக்கு 20 ஆயிரம் மட்டுமே கிடைத்திருக்கும்.