தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்தின் தோ்தலை வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தோ்தலை நடத்த உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதாகவும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. சங்க நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள மஞ்சுளா என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இத்தேர்தலில் டி. சிவா தலைமையிலான பாதுகாப்பு அணி போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு டி. சிவாவும் பொருளாளர் பதவிக்கு கே. முரளிதரனும் செயலாளர்கள் பதவிகளுக்கு பி.எல். தேனப்பனும் ஜேஎஸ்கே சதிஷ் குமாரும் துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு ஆர்கே சுரேஷும் தனஞ்ஜெயனும் போட்டியிடவுள்ளார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கே. ராஜன், ராதாரவி, சித்ரா லக்ஷ்மணன் உள்ளிட்ட பலர் போட்டியிடவுள்ளார்கள். நடிகரும் டப்பிங் சங்கத் தலைவருமான ராதாரவி, கடந்த டிசம்பர் மாதம் திடீரென பாஜகவில் இணைந்தார். தற்போது, தயாரிப்பாளா் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அவர் போட்டியிடுகிறார்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் சார்பில் தேனாண்டாள் முரளி தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
ஜூன் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்கள் மே 11 முதல் 14-ம் தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை செப்.30 ஆம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.