சாதனை படைத்துள்ள விஜய்யின் நெய்வேலி செல்ஃபி!

கடந்த பிப்ரவரி மாதம், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி...
சாதனை படைத்துள்ள விஜய்யின் நெய்வேலி செல்ஃபி!
Updated on
1 min read

ரசிகர்களுடன் இணைந்து நெய்வேலியில் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம், ட்விட்டர் தளத்தில் சாதனை படைத்துள்ளது.

கடந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டது ட்விட்டர் இந்தியா நிறுவனம். பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட போஸ்டரை விஜய் பகிர்ந்த ட்வீட், அதிக ரசிகர்களால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்களின் ட்வீட்களை விடவும் விஜய்யின் ட்வீட் தான் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. தற்போது ட்விட்டர் தளத்தில் மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார் விஜய்.

கடந்த பிப்ரவரி மாதம், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் பிகில் படம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். பிறகு விஜய் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சமயத்தில் வெளியிடப்பட்ட செல்ஃபி புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேன் மீதேறி படப்பிடிப்பில் இருந்த தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு மத்தியில் அந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டார் விஜய். 

ட்விட்டரில் பகிரப்பட்ட இந்தப் புகைப்படத்தை இதுவரை 1,48,000 பேர் ரீட்வீட் செய்துள்ளர்கள். அதேபோல 3,59,000 பேர் லைக் செய்துள்ளார்கள். ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்கிற சாதனையை இது படைத்துள்ளது. இதையடுத்து இந்தச் சாதனையை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com