ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் - நிசப்தம். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரெண்டு படத்துக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். தெலுங்கில் நிசப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளத்தில் சைலன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2018-ல் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த வருடம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
சைலன்ஸ் படம் அக்டோபர் 2 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்தப் படம் பற்றி ஒரு பேட்டியில் மாதவன் கூறியதாவது:
இந்தப் படத்தை கமல் நடித்த பேசும் படம் போல வசனம் இல்லாமல் எடுப்பதாகத்தான் முதலில் திட்டமிட்டார்கள். ஆனால் கதையில் பரபரப்புத்தன்மை உள்ளதால் வசனம் இல்லாமல் இருந்தால் குழப்பம் ஏற்படும் என எண்ணினோம். இதனால் குறைவான வசனங்களைப் பயன்படுத்தியுள்ளோம்.
படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் திரையரங்குகள் அழிந்து போகாது. திரையரங்குகளுக்காகப் படங்கள் நிச்சயம் உருவாக்கப்படும். ஆனால் ஓடிடியின் வருகையால் வித்தியாசமான கதைகளை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரீத் இணையத் தொடரின் கதை திரையரங்குக்குப் பொருத்தமாக இருக்காது. ஆனால் அமேசான் பிரைமில் வெளியானதால் பெரிதளவில் கவனம் கிடைத்தது என்றார்.