அந்நியன் திரைப்படத்தின் கதை தனக்கே சொந்தம் என இயக்குநர் சங்கர் விளக்கமளித்துள்ளார்.
விக்ரம், சதா நடிப்பில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படம் 2005-ல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
அந்நியன் படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளார் ஷங்கர். ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் இப்படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. ஜெயந்திலால் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இதையடுத்து அந்நியன் படத்தைத் தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அந்நியன் படத்தின் கதையைத் தழுவி ஹிந்தியில் இயக்குநர் சங்கர் இயக்க உள்ளதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ள அவர் அந்நியன் படத்தின் கதை உரிமையை மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து தான் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்நியன் திரைப்படத்தின் கதைக்கான முழு உரிமை தன்னிடம் உள்ள நிலையில் உரிய அனுமதியின்றி கதையை ரீமேக் செய்வதோ தழுவி படம் எடுப்பதோ சட்டவிரோதமாகும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள இயக்குநர் சங்கர் அந்நியன் திரைப்படத்தின் கதை தனக்கே சொந்தம் என தெரிவித்துள்ளார். எழுத்தாளர் சுஜாதா அந்நியன் திரைப்படத்தில் வசனம் மட்டுமே எழுதியதாகத் தெரிவித்துள்ள சங்கர் திரைப்படத்தின் கதை உரிமம் தனக்கு மட்டுமே சொந்தம் எனக் குறிப்பிட்டுள்ளார்.