பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்தின் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.வி. ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். கோ, அயன், மாற்றான், அனேகன், கவண், காப்பான் எனப் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக ஆரம்பத்தில் பணியாற்றிய கே.வி. ஆனந்த், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து மலையாளப் படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்தப் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். காதல் தேசம் படம் மூலமாகத் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கினார்.
இந்நிலையில் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 54.
கே.வி. ஆனந்தின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமூகவலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி என்று கூறியுள்ளார்.