கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி. இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ஓ.என்.வி. கல்சுரல் அகாதெமி அறிவித்துள்ளது.
கேரளத்தில் இலக்கியத்துக்கான உயா்ந்த தேசிய விருதாக வழங்கப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது இந்த ஆண்டு கவிஞா் வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக இரு நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மலையாளி அல்லாத ஒருவா் பெறும் முதல் விருது இதுதான். ஓ.என்.வி. கல்சுரல் அகாதெமி இந்த விருதை வழங்குகிறது.
மலையாளப் பெருங்கவிஞா்களுள் ஒருவா் ஓ.என்.வி குறுப். சிறந்த இலக்கியவாதியாகவும் பாடலாசிரியராகவும் விளங்கியவா். இந்தியாவின் உயா்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது பெற்றவா். சிறந்த பாடலுக்கென்று ஒரு தேசிய விருதும் பெற்றவா். 25 கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறாா். அவா் பெயரால் 2017-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை சுகதகுமாரி, எம்.டி.வாசுதேவன் நாயா், அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி, லீலாவதி போன்ற மூத்த மலையாளப் படைப்பாளா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் எம்.டி. வாசுதேவன் நாயா், அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி இருவரும் ஞானபீட விருதுகளையும் பெற்றவா்கள்.
இந்த ஆண்டுதான் மலையாளி அல்லாத ஓா் இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும். இந்திய இலக்கியத்திற்கு கவிஞா் வைரமுத்துவின் ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.
அண்மைக் காலமாகச் சமூகவலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட பெண்கள் சிலர் பாலியல் புகார்களைக் கூறியுள்ளார்கள்.
இதனால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. இலக்கிய விருது வழங்கப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கேரளத்தைச் சேர்ந்த நடிகை பார்வதி, இயக்குநர் அஞ்சலி மேனன், நடிகையும் இயக்குநருமான கீது மோகன்தாஸ், நடிகை ரிமா போன்றோர் இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
இதையடுத்து வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி. இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ஓ.என்.வி. கல்சுரல் அகாதெமியின் தலைவர் அடூர் கோபாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.