''என் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...'' - கமல்ஹாசன் உருக்கமான அறிக்கை

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் கமல்ஹாசன் உருக்கமான அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
''என் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...'' - கமல்ஹாசன் உருக்கமான அறிக்கை
Published on
Updated on
1 min read

கரோனா காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இந்த நிலையில் அவர் நேரடியாக பிக்பாஸ் படப்பிடிப்பிற்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் அவரே தொகுப்பாளராக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் தான் இன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கிறார். இன்றைய ப்ரமோவில் கமல் தொகுத்து வழங்குவதை பார்க்கலாம். 

இந்த நிலையில் கமல்ஹாசன் தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்

என்னுயிரே... என்னுறவே... என் தமிழே...

மருத்துவமனை வாசம் முடிந்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல கவனித்து சிகிச்சையளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், என் மகள்களுக்கும் ஊண் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், தம்பி மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அண்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலவைர்களுக்கும் என் நன்றிகள். 

என் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்புச் சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீபிரியா, உள்ளிட்ட திரைத்துறை ஊடகவியலாளருக்கும் என் நன்றிகள். 

என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், விக்ரம் திரைப்படக் குழுவினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும் விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள். 

நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலையங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும் நேர்த்திக்கடன் செய்தும், அன்ன தானம், இரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com