சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்துக்கு தமிழின் முன்னணி இயக்குநர்கள் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. டாக்டர் படத்துக்கு தமிழின் முன்னணி இயக்குநர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குநர் ஷங்கர், ''இந்த கரோனா காலகட்டத்தில் டாக்டர் திரைப்படம் சிறந்த சிரிப்பு மருந்தை நமக்கு அளித்துள்ளது. எல்லோரையும் சிரிக்க வைத்தமைக்கு இயக்குநர் நெல்சனுக்கு பாராட்டுகள். சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய படத்தை அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் சுசீந்திரன், 'இன்று மாலை குடும்பத்துடன் டாக்டர் திரைப்படம் பார்த்தேன். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளித்த இயக்குநர் நெல்சன் அவர்களுக்கும் சிவகார்த்திகேயன் சகோதரர்க்கும் எனது வாழ்த்துகள்' என்றார்.
இதையும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படப்பிடிப்பில் சலசலப்பு
இயக்குநர் ரத்னகுமார், 'டாக்டர் நின்னு பேசும். திரையுலக வாழ்க்கையில் சிறந்த நடிப்பை டாக்டர் படத்துக்கு சிவகார்த்திகேயன் அளித்துள்ளார். வழக்கம் போல பின்னணி இசையின் தலைவன் அனிருத் மிகச்சிறப்பாக செய்துள்ளார். அனிருத்தின் பின்னணி இசைக்கு திரையரங்கமே அதிர்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம்.
வேற மாரி சம்பவம் செய்துள்ளீர்கள் நெல்சன் . டாக்டர் படத்தின் இடைவேளையின் போது பார்வையாளர்களின் திருப்தியைக் காணலாம். பீஸ்ட் படத்துக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்றார்.
இயக்குநர் பரத் நீலகண்டன், 'டாக்டர் படத்தின் வெற்றி மிக முக்கியமானது. ஒரு முன்னணி நாயகன் டார்க் காமெடி என்ற வகையைச் சார்ந்த படங்களை செய்வதும், அது வெற்றி அடைவதும் பல இயக்குநர், எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும் விஷயம். இதை ஒரு கேம் சேஞ்சராக பார்க்கிறேன். சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலிப்குமாருக்கு நன்றி வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பிரபல நடிகர் நெடுமுடி வேணு திடீர் மரணம்
'ஓ மை கடவுளே' பட இயக்குநர் அஸ்வத், 'உருண்டு, உருண்டு சிரித்தேன். கண்ணில் தண்ணீர் வர வர சிரித்தேன். டான் சிவகார்த்திகேயன் எல்லோரையும் வசீகரிக்கிறார். நெல்சன் திலிப்குமார் நீங்கள் சிறந்த எழுத்தாளர். அனிருத்தின் இசை படத்துக்கு முதுகெலும்பு. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு மிக சிறப்பு. யோகி பாபுவும், டோனியும் சிரிப்பு மருத்துவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, டாக்டராக சிவகார்த்திகேயன் பாராட்டத்தக்க வகையில் நடித்திருக்கிறார். இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனித்துவமாகவும், பொழுதுபோக்காகவும் படமாக்கியிருக்கிறார். பெரிய கதாநாயகனை தனித்துவமான கதாப்பாத்திரமாக மாற்றி, அந்த கதாப்பாத்திரத்துக்குள் ஹீரோயிசத்தையும், பொழுதுபோக்குத்தனத்தையும் வைத்தது சிறப்பு. பிரியங்கா மோகன் அழகாக நடித்திருக்கிறார். என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், சார் ஒருத்தர் முதல் காட்சியிலேயே முழு கதையை சொல்லி படத்தை தொடங்கி வெற்றி பெற்றார். எல்லாம் அங்கேயிருந்து தொடங்கிய நம்பிக்கை சார். என்று பதிலளித்தார்.
இயக்குநர் வெங்கட் பிரபு, டாக்டர் திரைப்படம் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பிடித்தது. சிறப்பான பொழுதுபோக்கு திரைப்படம். சிவகார்த்திகேயன் செம சார். நெல்சன் திலிப்குமாரின் நகைச்சுவையான எழுத்தும், அனிருத்தின் பின்னணி இசையும் பிடித்தது. குடும்பத்துடன் காணக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துகள். திரையரங்குகளில் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இருமுகன், நோட்டா, எனிமி ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர், டாக்டர் நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். திறமையான காட்சி வடிவமைப்பு படத்தின் நகைச்சுவையை நன்றாக வேலை செய்ய உதவியிருக்கிறது. நெல்சன் திலிப்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் அண்ணாவிற்கு வாழ்த்துகள். அனிருத் கலக்கிவிட்டார். எல்லா நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூடர் கூடம் பட இயக்குநர் நவீன், ''தான் சிரிக்காமல், தனக்கே முக்கியத்துவம் வேண்டும், தான் மட்டுமே எல்லா சாகசமும் செய்யணும் என்று நினைக்காமல், கதைதான் முக்கியம் என்று ஒரு குழு உணர்வோடு செயல்பட்டு, அனைவரையும் சிரிக்க வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சாத்தியமாக்கிய இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.