உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திற்காக அம்பேத்கர் சிலையும் பெரியார் சிலையும் அருகருகே வைக்கப்பட்டதால் படப்பிடிப்பில் சலசலப்பு ஏற்பட்டது.
உடுமலையில் கடந்த சில நாட்களாக உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ஆர்டிகிள் 15 படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இதில் உதயநிதி ஸ்டாலின் டிஎஸ்பியாக நடிக்கிறார். இன்று உடுமலை நகரிலுள்ள பழைய நகராட்சி கட்டடத்திற்குள் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. இதற்காக நகராட்சி அலுவலகம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
இதையும் படிக்க- 'வீட்டில் பணமில்லையென்றால்..' ஆட்சியருக்கு ஒரு திருடனின் கடிதம்
மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி 50க்கும் மேற்பட்டோர் அங்கு போராட்டம் நடத்துவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு முன்புறம் சாலையோரத்தில் படப்பிடிப்பிற்காக தற்காலிகமாக அம்பேத்கர் சிலையும் அருகிலேயே பெரியார் சிலையும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உடுமலையில் உள்ள இந்து முன்னணி அமைப்பினர் பெரியார் சிலையும் அம்பேத்கர் சிலையும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறி முழக்கங்களை எழுப்பினர். தகவல் கிடைத்ததும் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து இந்து முன்னணி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து போலீசார் அங்கு வந்து அம்பேத்கர் சிலை பெரியார் சிலையும் உரிய அனுமதி பெற்றுத்தான் வைக்கப்பட்டுள்ளது என்றும் இரண்டு நாள்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த சிலைகள் அகற்றப்படும் என்றும் கூறியதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுறனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.