அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகானுடன் தனுஷ் இணைந்து நடித்துள்ள அட்ராங்கி ரே திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் முதன் முதலாக ஹிந்தியில் நடித்து வெளியான ராஞ்சனா திரைப்படத்தை இயக்கியவர் ஆனந்த் எல் ராய். ராஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்று தனுஷிற்கு ஹிந்தியில் ரசிகர்கள் உருவாக காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணி இணைந்துள்ள படம் 'அட்ராங்கி ரே'. இந்தப் படத்தில் தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் கரோனா பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக இந்தப் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹிந்தியில் வரிசையாக திரைப்படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அட்ராங்கி ரே படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அக்ஷய் குமார், அட்ராங்கி ரே படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.