பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் தலைப்பு அறிமுக விடியோ அக்டோபர் 23இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு தங்கலான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை இந்தப் படம் பேசுவதாக கூறப்படுகிறது. டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறும் கதை என டீசர் மூலம் நமக்கு தெரிய வருகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் விக்ரம் காவிரி ஆற்றில் குளிக்கும் விடியோவை பதிவிட்டு அவர் கூறியிருப்பதாவது:
இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு. கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘பேக் அப்’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம்.