திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி இளம் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் நடிகர் விஜய் பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் தயாரிப்பாளராகவும் பிரபல நடிகராகவும் இருப்பவர் விஜய் பாபு(45).
‘ஹோம்’ ‘ஆடு’ ‘திருச்சூர் பூரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள விஜய் பாபு கடந்த சில நாள்களுக்கு முன் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார் என துணை நடிகை ஒருவர் பரபரப்பு புகாரை அளித்தார்.
புகாரில், ‘சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் எனக்கு நடிகர் விஜய் பாபு அறிமுகமானார். சில தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கியதால் நெருக்கமான நண்பராகவும் இருந்தார். இந்நிலையில், அவர் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடந்த வாரம் வரை என்னை தாக்குவதும் பாலியல் வன்கொடுமை செய்வதும் தொடர்ந்து வந்தது. மேலும், அந்தரங்க விடியோவைக் காட்டி விஜய் பாபு மிரட்டிவருகிறார். இனியும் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை’ எனக் குறிப்பிட்டார்.
அதன் பின், தலைமறைவான நடிகர் விஜய் பாபு மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே கேரள உயர்நீதிமன்றத்தில் விஜய் பாபு தரப்பிலிருந்து முன் ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் முன்ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தற்போது, தலைமறைவாக இருந்த நடிகர் விஜய் பாபு துபையிலிருந்து கேரளம் வந்துள்ளார். வழக்கு விசாரணை நாளை (ஜுன் 2) நடைபெறவுள்ளது.