மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்காக கைகோர்த்துள்ள சிரஞ்சீவி மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பிரகாஷ் ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கிய புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். வெறும் 46 வயதே ஆகும் புனித் ராஜ்குமாரின் மரணம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
புனித் மறைந்து ஓராண்டு நிறைவுபெறவுள்ள நிலையில், அவரது நினைவாக நடிகர் பிரகாஷ் ராஜ் அப்பு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஏழைகளுக்கு உதவும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் திட்டம் அறிவித்தார்.
மாவட்டத்துக்கு 1 என்ற எண்ணிக்கையில் கர்நாடகத்தில் உள்ள 31 மாவட்டங்களுக்கும் இலவச ஆம்புலன்ஸ் வழங்க அவர் முடிவு செய்தார். இதனைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் சூர்யாவும், சிரஞ்சீவியும் தலா 1 ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார்கள்.
இருவரது உதவி குறித்து பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ''அன்புள்ள சூர்யா மற்றும் சிரஞ்சீவி அண்ணா, அப்பு எக்ஸ்பிரஸ் என்ற திட்டத்துக்காக ஆம்புலன்ஸ் வழங்கி எங்கள் கனவை நினைவாக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.