ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் தனியார் நிறுவனத்தின் பான் மசாலா விளம்பரங்களில் நடித்திருந்தார். அந்த நிறுவனம் புகையிலைப் பொருட்களையும் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பான் மசாலா விளம்பரங்களில் நடித்ததற்காக அக்ஷய் குமார் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். முன்னதாக மது மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக அவரது விழிப்புணர்வு விளம்பரங்களையும் பகிர்ந்து ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர்.
கடந்த 2 நாட்களாக அக்ஷய் குமார் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்த நிலையில் அக்ஷய் குமார் பான் மசாலா விளம்பரங்களில் நடித்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக்கோரியுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், அவர் குறிப்பிட்டிருப்பது,
அவரது பதிவில், ''என் ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னியுங்கள். கடந்த சில நாட்களாக உங்களுடைய எதிர்வினைகள் என்னை கடுமையாக பாதித்தது.
நான் இப்பொழுதும் இனியும் புகையிலைப் பொருள்களை ஆதரிக்க மாட்டேன். விமல் என்ற நிறுவனத்துடன் என் தொடர்பு குறித்து உங்களது கருத்துகளை நான் மதிக்கிறேன். தன்னடக்கத்துடன் நான் பின் வாங்குகிறேன். விளம்பரங்களில் கிடைத்த தொகை அனைத்தையும் நல்ல திட்டங்களுக்காக செலவிடுவேன்.
என்னுடன் அந்த நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவு வரை நான் நடித்த பான் மசாலா விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பாகும். ஆனால் எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்.'' என்று தெரிவித்துள்ளார்.
பான் மசாலா விளம்பரங்களில் நடித்ததற்காக ஷாருக்கான் மற்றும் அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் விமர்சிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.