திரைப்படங்களின் தயாரிப்புச் செலவைக் குறைக்கவும் சரியாகத் திட்டமிடவும் மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணி ரத்னம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் ஆகியோர் மென்பொருளின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பில், பிறமொழிப் படங்கள், தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடுவது பற்றி மணி ரத்னத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
பிறமொழிப் படங்கள் இன்னொரு மாநிலத்தில் நன்றாக ஓடுவது என்பது புதிதாக ஆரம்பிக்கவில்லை. முன்பிருந்தே உள்ளது. இப்போது நிறைய படங்கள் வருவதாலும் வட இந்தியாவிலும் நன்றாக ஓடுவதாலும் இப்போது அதிகமாகப் பேசப்படுகின்றன. சந்திரலேகா படம், வட இந்தியாவில் கொடி நாட்டியது. ஒரு படத்தைப் பலர் பார்ப்பது நல்ல விஷயம். இதை யாராலும் நிறுத்த முடியாது. ஹாலிவுட்டில் இருந்து வரும் படங்களை தமிழில் டப் செய்து பார்க்கிறோம். கன்னடத்திலிருந்து வரும் படங்களைப் பார்த்தால் என்ன தவறு? இது தொடரும்.
நல்ல படங்கள் தமிழிலும் எடுக்கப்பட்டால் வெளிமாநிலங்களில் நன்கு ஓடும். ஒரு நடிகருக்கு அதிகச் சம்பளம் வழங்குவது என்பது அந்த நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே நடக்கும் விஷயம்.
தமிழில் நல்ல தரம் உள்ளது. இங்குள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அபார திறமை கொண்டவர்கள். இளைஞர்கள் நிறைய பேர் வருகிறார்கள். அதனால் தமிழ்த் திரையுலகினர் கவலைப்பட வேண்டாம். இங்கு நிறைய திறமைகள் உள்ளன. தமிழ்த் திரையுலகம் குறித்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.